Pages

Thursday, September 8, 2016

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது. காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார் 99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர், தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 22 ஆயிரம் போலீஸார் பணியிடங்கள் காலியாக உள்ளன.


மேலும், மக்கள்தொகைக்கு ஏற்றப்படி, காவல் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.

இதையடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பணி நெருக்கடியால் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது, உடல்நலம் பாதிக்கப்பட்டு விருப்ப ஓய்வில் செல்வது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறத் தொடங்கின.

இந்த நிலையில், காவல் துறைக்கு 13,137 காவலர்களை தேர்வு செய்வதற்கும், சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு காவலர் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, தீயணைப்பு, சிறை, காவல் துறைகளில் சுமார் 15 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், இதற்கான அறிவிப்பு ஒரிரு நாள்களில் வெளியாகும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தேர்வு முறை:
முதலில் நடக்கும் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், தேர்வாகிறவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறகிறவர்களுக்கு காவலர் பணிநியமனம் கடிதம் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.