Pages

Monday, March 21, 2016

மாதம் ரூ.3,000 சம்பளத்தில் முழுநேர பணி அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள் கொதிப்பு

அரசு பள்ளிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள், கால முறை ஊதியத்துக்கு மாற்றப்படாததால், நான்கு ஆண்டுகளாக, மாதம், 3,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த, 2012ம் ஆண்டு, 3,000 துப்புரவு பணியாளர்கள், 2,000 இரவுக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.இரு பணியிடங்களுக்கும், அடிப்படை கல்வித்தகுதி, ௧௦ம் வகுப்பு என்ற நிலையில், இரவு காவலர் பணியிடங்களை கால முறை ஊதியத்திலும், துப்புரவு பணியாளர் பணியிடங்களை சிறப்பு கால முறை ஊதியத்திலும் நியமிக்கப்பட்டனர்.


இதனால், மாதம், 3,000 ரூபாய் மட்டுமே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. ஒன்றிரண்டு ஆண்டுகளில், கால முறை ஊதியத்துக்கு மாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில், நான்காண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். ஆனால், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அரசு பள்ளி துப்புரவு பணியாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஒரே அரசாணையில், துப்புரவு பணியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இரவுக்காவலர்களை கால முறை ஊதியத்திலும், துப்புரவு பணியாளர்களை சிறப்பு கால முறை ஊதியத்துக்கும் மாற்றினர். அப்போதே, ஆட்சியாளர்களிடம் கேட்ட போது, ஒரு சில மாதங்களில் மாற்றியமைக்கப்படும் என உத்தரவாதம் வழங்கினர்.

ஆனால், நான்காண்டுகளாகியும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகரிக்கும் விலைவாசியில், இன்னமும் மாதத்துக்கு, ௩,௦௦௦ ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம். அரசு ஊழியர்களுக்கான சலுகைகளான சம்பள உயர்வு, பண்டிகை கால அட்வான்ஸ் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கிடையாது. சாதாரண தினக்கூலி வேலையில் கூட, 7,000ம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கின்றனர். ஆனால், காலை, 8:00 மணி முதல், மாலை, 6:--00 மணி வரை, பள்ளியில் பணிபுரியும் எங்களுக்கு, மாத சம்பளம், 3,000 ரூபாய் மட்டுமே.

இரவு காவலர்களோ, 20 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் அதிகரித்ததுடன், ரிக்கார்டு கிளார்க்காக பதவி உயர்வு வழங்க பேனல் தயாரிக்கப்பட்டுள்ளது. எத்தனை போராட்டம் நடத்தியும், எங்களது கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.