Pages

Saturday, February 27, 2016

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 


தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு காலியிடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. நேர்முகத் தேர்வில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எனப்படும், 'சீனியாரிட்டி'க்கு - 10; உயர் கல்வித் தகுதிக்கு - 5; பணி அனுபவத்துக்கு - 2; நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு - 8 என, மொத்தம், 25 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கே பணி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்தால், அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக, தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வையும் கணக்கிட்டு, தேர்வு முடிவை அறிவிக்க உத்தரவிட்டது. 
எனினும், தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்கள் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது, தேர்வர்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்திஉள்ளது. 
நேர்முகத் தேர்வு மூலம், ஆய்வக உதவியாளர் பணியில் சேர்த்து விடுவதாக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர், லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பணத்தை கொடுத்த தேர்வர்கள் பலரும், தங்கள் பணம் என்ன ஆகும் என தெரியாமல் புலம்பத் 
துவங்கியுள்ளனர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.