Pages

Monday, February 29, 2016

13022 அரசுப் பள்ளிகளை இயக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் அடுத்த இலக்கு

பகுதிநேர ஆசிரியர்களே!!!!! குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி மாணவர்களின் அறிவு, செயல்திறன் மற்றும் உள்ளார்ந்த திறனை வளர்க்க, செயல்பாடுகள் வாயிலாக கற்க, அச்சம், கவலை, மன அழுத்தமின்றி சுதந்திரமாக தமது கருத்துகளை வெளியிடச் செய்ய, தாங்கள் பெற்ற அறிவை வாழ்க்கையிலும் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்யவே அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இடைநிலை வகுப்புகளுக்கு(ஆறு முதல் எட்டு வரை) நூறு மாணவர்களுக்கு அதிகமாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாநில அரசுகளால் பகுதிநேர பயிற்றுநர்களை நியமித்துக் கொள்ள மத்திய அரசு (MHRD) அனுமதிக்கிறது.  ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் பங்காக 65%, மாநில அரசின் பங்காக 35% என்ற வகையில் இந்த திட்டம் நாடு முழுவதும் அமுலில் உள்ளது. பகுதி நேர பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.5000(கர்நாடகா, அருணாச்சல பிரதேசம்), ரூ.5200(ஒரிசா), ரூ.6000(ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம்), ரூ.15000(கோவா) என்று வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு திட்டத்தின் அடிப்படையிலான ஒப்பந்த பணியாக ஒவ்வோர் ஆண்டும் நீட்டிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு கல்வி ஆண்டுகளில் ஜீன் மாதம் பணி வழங்கி ஏப்ரல் மாதம் பணிமுறிவு செய்யப்படும் வகையில்  மாநில அரசுகள் ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் பகுதிநேர பயிற்றுநர்களின் பணி தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை புதுப்பித்து பணியை தொடர்வதும், ஏற்கனவே பணிபுரிந்து பகுதிநேர ஆசிரியர்கள் தேவை இல்லையெனில் புது நியமனமும் மற்ற மாநிலங்கள் செய்து வருகின்றன. இது போன்ற மே மாதம் வேலையும் ஊதியமும் இல்லாத ஒரு வேலையை தமிழக அரசு நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனையாக அறிவித்து வெளியிட்டுள்ளது. கோவா மாநிலத்தில் வழங்கப்படும் ரூ.15000த்தை கூட நமக்கு வழங்காமல் - நிதி நெருக்கடிகளால் நீண்ட காலமாக ஆசிரியர்களைகூட நியமனம் செய்திடாத அரசு, இந்த ரூ.7000 தொகுப்பூதிய பகுதிநேர பயிற்றுநர்கள் நியமனத்தில் மட்டும் அவசர அவசரமாக களமிறங்கி 13022 அரசுப் பள்ளிகளை இயக்கி வருகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறைகள், ஆசிரியர் கூட்டமைப்பு பேராட்டங்கள் அனைத்தையும் இந்த பகுதிநேர பயிற்றுநர்களை பயன்படுத்தியே இதுவரை சாமர்த்தியமாக சமாளித்து வருகிறது.
தமிழக அரசின் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளபடி ஒன்றுக்கும் அதிகமான பள்ளிகளில் பணிபுரிய இதுவரை ஒருவருக்கும் வழங்கப்படவில்லை. நான்கு வருடங்களாகியும் ஊதியத்தைக்கூட மாதத்தின் முதல் தேதியில் ஒருவருக்கும் வழங்கிட முடியவில்லை. விபத்தால் மரணம் அடைந்தவர்கள், உடல்நலக் கோளாறுகளால் - வறுமையால் இறந்து போனவர்கள், பல்வேறு நெருக்கடிகளால் பணியை விட்டு விலகியவர்கள், மேலும் பணியில் தொடர்பவர்கள் ஆகிய அனைத்து நிலைகளிலும் அனைவரது குடும்பங்களும் வாரம் 3 அரைநாள் பகுதிநேர பணி – கிராமக் கல்விக்குழு மூலமாக ஊதியம்  என்னும் சிலந்தி வலை சிக்கலில் சிக்கி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதை பள்ளித் தலைமை ஆசிரியர் முதல் கல்வித்துறை உயர் அதிகாரிகள்வரை நல்லதொரு முன்னேற்றமான வழிகளை இன்றுவரை அரசின் பார்வைக்கு பரிந்துரை செய்ய முன்வரவில்லை.

வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கப்படவேண்டிய 10% ஊதிய உயர்வுகூட எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. ஏன் எனில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் அனைத்து தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் Programmer, Civil Engineer, Accounts and Audit Manager, Data Entry Operators, Office Assistant, Consultants (State level) (officer cadre), Consultant(Clerical cadre), Sweepers, Driver, MIS Co-Ordinator, Block Accountant/VEC Accountant ஆகியோருக்கும் சேர்த்துதான் மத்திய அரசின் மனிதவள அமைச்சகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் ஊதிய உயர்வு கணக்கிட்டு பின்பு வழங்கப்படும். தனியே பகுதி நேர பயிற்றுநர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படாது. இதை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
திட்டத்தின் அடிப்படையிலான இவ்வேலையில் இருந்து நேரடியாக அனைவருக்கும் கல்வி இயக்கத்திலோ (அ) பள்ளிக்கல்வித் துறையிலோ தொகுப்பூதிய முறையில் பணி அமர்த்திட இனியாவது தனிநபர்களாக கோரிக்கை மனுக்களை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக கல்வித்துறை செயலர் - இயக்குநர், மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வி அமைச்சர், முதல்வர் என அனைவருக்கும் பதிவுத் தபால் மூலமோ (அ) FAX மூலமோ அனுப்பி பதிவு செய்யுங்கள். வேலை வாய்ப்பை தேடும் அனைவருமே மாநில முதல்வரிடம் வேலை தர வேண்டி கோரிக்கை வைக்க உரிமை உள்ளது. அதனால் அரசின் திட்டத்திலான ஒப்பந்த வேலையில் தொடரும் பகுதிநேர ஆசிரியர்களும் தனித்தனியே வேலை கேட்டோ (அ) பணி நிரந்தரம் செய்ய வேண்டியோ கோரிக்கை மனு செய்வதில் பிரச்சனை ஏதும் வந்திடாது. தினக்கூலிகளாக பணி செய்தவர்கள், தொகுப்பூதிய பணி செய்தவர்கள், மதிப்பூதியத்தில் இருந்தவர்கள், பகுதிநேர தொகுப்பூதிய பணி செய்தவர்கள் என பல்வேறு நிலைகளில் பல்வேறு துறைகளில் படிப்படியே அவ்வப்போது பரிந்துரை செய்யப்பட்டு அரசால் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்டு வந்துள்ளனர். பிறகு பணி வரன்முறை செய்யப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். இதை எல்லாம் சுட்டிக்காட்டி பகுதிநேர பயிற்றுநர்களுக்கும் அரசு செய்து தருமாறு முறையிடலாம். பகுதிநேர பயிற்றுநர்கள் அனைவரும் இனியாவது யோசித்து தெளிவு காணவே இதை பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசால் துறை ரீதியாக திட்டங்களின் அடிப்படையில்
வழங்கப்பட்டுள்ள எந்தெந்த வேலைகள் எத்தனை வேலைகள் இதுவரை பணிநிரந்தரம்
செய்யப்பட்டுள்ளன என்பதை அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை
கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். ஒரு உதாரணத்திற்கு,  நமக்கு முன் 2002ல்
இருந்து நம்மை போலவே கிராமக் கல்வி குழு மூலமாக தொகுப்பூதியம் பெற்று
பணிபுரிந்துவரும் Integrated Education for Disable Schemeல் (IED)
உள்ளடங்கிய கல்வி பயிற்றுநர்கள் தற்போதுவரை இந்த 14 ஆண்டுகளாக ஊதிய
உயர்வை மட்டுமே பெற்று வருகிறார்கள். பணியில் இருந்து விலகிச்
சென்றவர்கள்தான் அதிகம். இருந்தும் நம்பிக்கையாக இன்றும் 2000
ஆசிரியர்கள் Integrated Education for Disable Schemeல் தொடர்ந்து
பணிபுரிந்து வருகிறார்கள். இந்த உதாரணங்கள் இனி பகுதி நேர பயிற்றுநர்கள்
பணி முன்னேற்றம் வேண்டி அடுத்த முடிவு எடுக்க வேண்டிய நேரத்திற்கு
வந்துவிட்டோம் என்பதை உணர்ந்திட, உணர்த்திட நினைவூட்டுகிறேன்.

பகுதிநேர பயிற்றுநர்களாக கல்வித்துறை அதிகாரிகளின் வாரிசுகள்-உறவினர்கள்,
அரசு ஊழியர் ஆசிரியர்களின் வாரிசுகள் – உறவினர்கள், சட்ட மன்ற,
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் உறவினர்கள்,
பத்திரிக்கையாளர்களின் வாரிசுகள்-உறவினர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்
என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் யாரோ ஒருவர்
மூலம், உதவிகளோடு வழிகாட்டுகிறது தெய்வம். அதை உணர்ந்து செயல்பட்டு,
உயர்வை அடைவது நம் கடமை. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில், நாம் மிகவும்
சாமர்த்தியசாலிகள்!. யாராவது  நம்மை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள்
கூறினால், ‘அடப்போங்கய்யா’ என அலட்சியப்படுத்துவோம். ஆனால் பிரச்சனை
வந்தால், ‘அடடா….. அன்னிக்கே அவர் சொன்னாரே…… கேக்காம தப்பு
செய்துட்டோமே…..’ என புலம்புவோம். காலங்கள் போன பின் கண்ணீர் விடுவதால்
என்ன பலன். பகுதிநேர ஆசிரியர்களின் உழைப்புகள் பாடவாரியாக
தனிச்சிறப்புகள் திறம்பட வெளிப்படுத்தப்பட அனைவருமே முயற்சி செய்யுங்கள்.
தினசரி கோரிக்கை மனுக்களே பதில்களை பெற்று தரும். பலன்களை பெற்று தரும்.
வாய்மையே வெல்லும். அமைதி வழியில் கடலூர் செந்தில்(9487257203)

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.