Pages

Tuesday, October 27, 2015

மருத்துவக் கல்லூரி குறித்து அறிவிப்பு வராததால் ஏமாற்றம்!

கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து தகுதிகளும் இருந்தும், கேப்பர் மலையில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லுாரி துவங்காததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றுவாறு பல்வேறு வகையான நோய்களும் உருவெடுத்து வருகிறது.
இதுவரை கேள்விப்பட்டிராத பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், எய்ட்ஸ், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களை துன்புறுத்தி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் மருத்துவ நிபுணர்கள் குறைவாகவே உள்ளனர்.

சுகாதாரத்துறை கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால் அந்தளவுக்கு மருத்துவர்கள் இல்லை. இதற்கு காரணம் தமிழகத்தில் மருத்துவ கல்லுாரிகள் குறைவாக இருப்பதுதான். தமிழகத்தில் 20 அரசு மருத்துவ கல்லுாரிகளின் வாயிலாக 2655 மாணவ, மாணவியர்களும், 13 சுய நிதி கல்லுாரிகள் மூலமாக 1350 மாணவ, மாணவியர்களும், 10 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக 1650 மாணவ மாணவியர்களும் உட்பட மொத்தம் 5600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக்கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியில் மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லுாரி தேவை என உணர்ந்து முதல் கட்டமாக கடந்த 2011ம் ஆண்டு மருத்துவக் கல்லுாரி துவங்கப்படும் என அறிவித்தது.

அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கடலுார் அடுத்த கேப்பர் மலையில் காசநோய் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட 200 ஏக்கர் நிலத்தில் மருத்துவக் கல்லுாரி துவங்க தீர்மானிக்கப்பட்டு அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு ஏற்கனவே இயங்கி வந்த மருத்துவக் கல்லுாரியில் 710 கூடுதல் இடங்களை உருவாக்கியது. தற்போது புதுக்கோட்டை, கரூர் மாவட்டத்தில் புதிதாக மருத்துவ கல்லுாரி துவங்க கடந்த முறை நடந்த சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கடலுார் மாவட்டம் இடம்பெறவில்லை. கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 588 படுக்கை வசதிகள் உள்ளன.

ஏராளமான மருத்துவ பிரிவுகள் உள்ளன. என்.ஏ.பி.ஹெச்., தரச்சான்று பெற்ற மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. மருத்துவக்கல்லுாரி துவங்குவதற்கான 90 சதவீத தகுதிகள் இருந்தும் தற்போதைய அரசு அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக்கல்லுாரியை கொண்டுவர முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.