தற்போது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு அந்தந்த மாநிலங்களே நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. இதேபோல் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தாங்களாகவே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்கின்றன.
இந்த தேர்வு முறையை மாற்றி அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து அண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கருத்துக் கேட்டு இருந்தது. இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் பொதுக் குழு கூட்டம் கடந்த 1-ந்தேதி டெல்லியில் நடந்தது.
அப்போது, மத்திய அரசின் கருத்துக்கு ஒப்புதல் அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது பரிந்துரைகளையும் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு மருத்துவ கவுன்சில் அனுப்பி வைத்தது.
மேலும், இது தொடர்பாக 1956-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறது.
இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த பரிந்துரையின்படி நாடு முழுவதும் மருத்துவ படிப்பின் மீது ஆர்வம் கொண்டுள்ள மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு(பொதுத் தேர்வு) நடத்தப்படும். இது மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்’’ என்றார்.
மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் 2009-ம் ஆண்டு அப்போது இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேத்தன் தேசாயால் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கும் பொதுநுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றையும் அப்போது இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என்று அறிவித்தது.
மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்று 2 நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர். ஒரு நீதிபதி மட்டும் மருத்துவ கவுன்சிலின் அறிவிப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.