தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆமை வேகத்தில் நடக்கும், உதவி பேராசிரியர் பணி நியமனத்தால், 40 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. 'கெஸ்ட் லெக்சரர்' பணியிடங்களும் முழுமையாக நிரப்பாததால், கற்பித்தல் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 82 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், கடந்த நான்காண்டுகளாக, பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இப்பாடப்பிரிவுகளுக்காக மட்டும், 1,924 உதவி பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த, 4 ஆண்டுகளில், ஓய்வு பெற்ற ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து, மொத்தம், 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. பல்வேறு தடைகளையும், நீதிமன்ற வழக்குகளையும் தாண்டி, கடந்த மாதத்தில், 1,093 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், இன்னும், 1,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள், காலியாக இருக்கும் நிலையில், அரசு கல்லுாரிகளில், கல்விப்பணிகள் கடுமையாக பாதிப்புக்கு
உள்ளாகின்றன.இதுகுறித்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த, நான்கு ஆண்டுகளில் மட்டும், ஏராளமான பாடப்பிரிவுகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கையை, 40லிருந்து, 60 ஆக உயர்த்தியது என, ஆண்டுக்கு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதிகரித்துள்ளனர்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, போராடி, தற்போதுதான், 1,093 உதவி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் காலியாக உள்ள, 1,500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என தெரியவில்லை.
ஒவ்வொரு வகுப்பிலும் உட்கார இடம் இல்லாத அளவுக்கு மாணவ, மாணவியரை வைத்துக்கொண்டு, ஆசிரியர் பற்றாக்குறையால், அரசு கலைக்கல்லுாரிகள் தவித்து வருகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர் நியமனம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், 'கெஸ்ட் லெக்சரர்' பணியிடங்களும் அனுமதிக்கப்படவில்லை. உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கலைக்கல்லுாரிகளின் கல்வித்தரம் கேள்விக்
குறியாகிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
கெஸ்ட் லெக்சரருக்கு சம்பளம் இல்லை!
கல்லுாரிகளில், இரண்டாவது ஷிப்டு முழுவதும் கெஸ்ட் லெக்சரர் மூலம் நடத்தப்படுவதால், அதற்காக நியமிக்கப்பட்ட, 1,661 பேருக்கு, மாதா மாதம் சம்பளம் வழங்கப்பட்டு விடுகிறது. முதல் ஷிப்டு வகுப்புகளை பொறுத்தவரை, கால முறை ஆசிரியர்களை கொண்டே நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதில், ஏராளமான பணியிடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில், அவற்றில், தற்காலிகமாக, 60 சதவீதம் வரை, கெஸ்ட் லெக்சரர்களை நியமித்துக்கொள்ள அரசு உத்தரவிட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு, ஜூன் மாதம் முதல், கடந்த நான்கு மாதங்களாக, இதுவரை அரசு, சம்பளம் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், இவர்கள் சம்பளம் இன்றி தவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.