Pages

Friday, September 18, 2015

தகர கொட்டகையில் செயல்படும் ஆசிரியர் பல்கலை!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தகர கொட்டகையில் செயல்படுவதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், ஏழு அரசு கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட, 705 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. 


கண்காணிப்பு
இப்பல்கலை, 2006ல் துவங்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தான் ஆசிரியர் கல்விக்காக தனி பல்கலை உள்ளது.
* மாணவர் சேர்க்கை கண்காணிப்பு
* ஆசிரியர்கள் நியமனம் 
* கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
* கல்லூரிகளில் விதிமீறல் நடக்காமல், கண்காணிப்பு பணி மேற்கொள்வது போன்ற பணிகளை இந்த பல்கலை மேற்கொண்டுள்ளது. 


ஆனால், பல ஆண்டுகளாக தகர கொட்டகையில் தான், கல்வியியல் பல்கலை இயங்கி வருகிறது. சென்னை, மெரீனா கடற்கரைக்கு எதிரே, லேடி வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவன இடத்தில், சிறிய தற்காலிக கொட்டகை அமைத்து, அதில் பல்கலை அலுவலகங்கள் உள்ளன. மற்றொரு பழைய கட்டடத்தில், ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு போதுமான ஆய்வகம், கூட்ட அரங்கு வசதிகள் இல்லை.பொதுவாக, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளான போதுமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, பணியாளர் மற்றும் பார்வையாளர் கழிப்பறை வசதி, நூலகம், ஆய்வகம், கூட்ட அரங்கம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற விதி உள்ளது.
ரூ.95 கோடி செலவில்...ஆனால், கல்லூரிகளை கட்டுப்படுத்தும் இந்த பல்கலைக்கு அடிப்படை கட்டட வசதி கூட இல்லை. இதனால், பணியாளர், ஆராய்ச்சி மாணவர், பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகே உள்ள காரப்பாக்கத்தில், 10 ஏக்கரில், 95 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்டப்படுகிறது. 'இந்த பணி ஒப்பந்ததாரர்களால் தாமதமாகியுள்ளது. அதனால், ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து, பணிகளை விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டடத்துக்கு மாறுவோம்' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.