பாலியல் கல்வியில் விழிப்புணர்வு கொண்டுவருவதற்காக பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியை பாடமாக வைக்கவேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறைத்தலைவர் எஸ்.சுமதி, பெண்கள் கல்வி மைய துறை தலைவர் (பொறுப்பு) பாரதி ஹரிசங்கர், இந்திய பாலியல் நிபுணர்கள் சங்க தலைவர் டாக்டர் டி.காமராஜ் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாலியல் சுகாதார தினம்
சர்வதேச பாலியல் சுகாதார தினம் வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தில் ‘பாலியல் உரிமை மனித உரிமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.
பாலியல் விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கம். அதுதான் எங்கள் நோக்கம். காதல் எது, காமம் எது, வாழ்க்கை எது, வாழ்க்கையை எப்படி திட்டமிடவேண்டும். என்பனவற்றை அறியாதவர்களாக இருக்கிறார்கள். தேவையில்லாத கர்ப்பம், கருத்து முரண்பாடு, பாலியல் வன்முறை, விவாகரத்து, உடல்நலத்தை பாதுகாக்க தவறுதல், மன உழைச்சல், பாலியல் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் ஏராளமானவர்கள் உள்ளனர்.
பள்ளிக்கூடத்தில் பாடம்
எனவே பாலியல் விழிப்புணர்வை மாணவ-மாணவிகளிடம் ஏற்படுத்த பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியை பாடமாக வைக்கவேண்டும். எனவே, இதை வலியுறுத்தி 1 லட்சம் பேர்களிடம் கையெழுத்து வாங்கி அதை பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அனுப்ப உள்ளோம். கையெழுத்து இயக்கத்தை இன்றே (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறோம்.
செல்போன், இணையதளம் ஆகியவை புதிய தொழில்நுட்பத்தினால் வந்தவை. அவை வரவேற்கத்தக்கவை ஆனால் அவற்றில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இப்போதுள்ள இளையதலைமுறையில் சிலர் அதில் உள்ள தீயவற்றை எடுத்துக்கொள்கிறார்கள். தீய பழக்கவழக்கத்திற்காக சில இணையதளங்கள் உள்ளன. அவற்றை அடியோடு மறந்துவிடுங்கள். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.