Pages

Saturday, September 26, 2015

கல்வித்துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை: ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

கல்வித் துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை என்று மதுரையில் உள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெளியூர்களில் இருந்து மதுரைக்கு முக்கிய கூட்டங்களுக்கு வரும் ஆசிரியர்கள் தங்குவதற்கு ஏதுவாக மதுரையில் நடப்பாண்டில் ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தக் குடியிருப்புகளில் ஆசிரியர் இல்லங்கள் மட்டுமல்லாமல் கல்வித் துறையின் பல்வேறு பணிகளுக்கு ஏதுவான வகையில் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் பெ.சரவண முருகன் கூறியதாவது: சென்னை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே ஆசிரியர் இல்லங்கள்அமைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலும் ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தற்போது மதுரையில் நடைபெறும் பள்ளிக் கல்வித்துறையின் முக்கியமான கூட்டங்கள் அனைத்தும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டடங்களில் நடைபெறுகின்றன. சில நேரங்களில் அரங்குகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, முக்கிய கூட்டங்கள் நடத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு கட்டப்படும் ஆசிரியர் இல்லங்களோடு சேர்ந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதற்கு தனி மையங்கள், பள்ளிக் கல்வித் துறை கூட்டங்கள் நடத்துவதற்கு அரங்குகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவான வகையில் கருத்தரங்க கூடம் அமைக்கப்பட்டால் அது மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

1 comment:

  1. Sir any one of you tell me about the course PGDTE which is eligible for second incentive and equal to Mphil in English. Is it true.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.