Pages

Saturday, September 12, 2015

கல்வி உரிமைச் சட்டம்: முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு ரூ. 8 கோடி; தமிழக அரசு வழங்கியது

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டவர்களுக்கான கட்டணத் தொகையில் முதல் கட்டமாக ரூ. 8 கோடி தனியார் பள்ளிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக, ரூ. 60 கோடி அடுத்த சில நாள்களில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பள்ளி அறிமுக வகுப்புகளில் 25 சதவீதம் தனியார் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்படி, 2013-14 ஆண்டில் 49,864 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டதாகவும், 2014-15 ஆண்டில் 86,729 பேர் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாணவர்களுக்கான கட்டணமாக, தனியார் பள்ளிகளுக்கு ரூ. 97 கோடி வழங்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டது.
 ஆனால், எல்.கே.ஜி. உள்ளிட்ட மழலையர் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
 முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்க மட்டுமே விதிகளில் இடமுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கான ரூ. 97 கோடியை தமிழக அரசே வழங்கும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
 அதன்படி, முதல் கட்டமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 500 தனியார் பள்ளிகளுக்கு ரூ. 8 கோடி வரை திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
 இரண்டாவது கட்டமாக, தனியார் பள்ளிகளுக்கு ரூ. 60 கோடியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனைவருக்கும் கல்வி இயக்கம் எடுத்து வருகிறது. அடுத்த வாரத்தில் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 நிகழ் கல்வியாண்டில் (2015-16) ஜூலை 31 வரை, இந்த ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 80,450 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கட்டண விவரங்களையும் தமிழக அரசு கோரியுள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.