Pages

Tuesday, August 25, 2015

பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்களின் பணி நிரவல்களை ரத்து செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:


மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

உபரி ஆசிரியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் அனைவரும் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை போதிய பாடவேளையுடன் கடுமையாக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி காட்டியவர்கள். உபரி என்றால் பாடவேளை ஏதும் ஒதுக்கப்படாமல் வெறுமனே இருந்திருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலை எந்த ஆசிரியர்களுக்கும் ஏற்படவில்லை. பள்ளிகளில் கடுமையான பணிச்சுமையுடன் தான் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 37 ஆயிரம் மாணவ-மாணவிகள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். எனவே ஆசிரியர்கள் உபரியாக இருக்க காரணம் இல்லை.

பணி நிரவலை ரத்து செய்ய வேண்டும்

உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்ததில் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்திற்கும் முரண்பாடுகளும், குளறுபடிகளும் உள்ளன. உதாரணமாக ஒரு பள்ளியில் உபரி ஆசிரியர்கள் இல்லை என்று முதன்மை கல்வி அலுவலகம் தெரிவிக்கிறது. ஆனால் பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகம் அந்த பள்ளியில் 5 உபரி ஆசிரியர்கள் உள்ளனர் என்கிறது. எனவே இவற்றை முறைப்படுத்தி சரி செய்யாமல் ஆசிரியர்களை பணி நிரவல் என்ற பெயரில் இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்.

ஒருவேளை அப்படி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அவர்களை மே மாத இறுதியில் செய்ய வேண்டும். எனவே நாளை (புதன்கிழமை) முதல் 29-ந் தேதி வரை நடத்தப்படும் பணி நிரவல்களை ரத்து செய்து உபரி ஆசிரியர்களின் கண்ணீரை துடைத்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மாயவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.