Pages

Saturday, July 25, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி கல்வி இயக்குனர் பேட்டி

"இந்தாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட உள்ளது" என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு குறித்தும்,
இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்தும் வேலூர், கடலூர், திருச்சி, மதுரை மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதன்பின் நெல்லை, கோவை, காஞ்சிபுரத்தில் நடக்கிறது.மாநிலத்தில் அரசு பள்ளிகளில் 90 சதவீதத்திற்கு மேல் கழிப்பறை வசதி உள்ளது. இதுதவிர எஸ்.எஸ்.ஏ., திட்டம் மற்றும் என்.எல்.சி., சார்பில் 1500 கழிப்பறைகள் வசதி செய்யப்பட்டு நூறு சதவீத வசதியை எட்டியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.

இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏராளமான மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர். புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்குமுன் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் வினாத்தாளில் மாணவர்கள் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் சில மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் கருதி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது. இவ்வாறு கூறினார் .

ஆக.,1ல் கலந்தாய்வு 

ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது 2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'ஒரு பள்ளியில் மூன்று கல்வியாண்டு பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற அந்த நிபந்தனையை ரத்து செய்ய ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து துறை செயலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு குறித்து அவர் பரிசீலனை செய்வார் என கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.