ஜெ., மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என ஜெ., சசிகலா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட் இன்று விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை அடுத்து தி.மு.க,வினர் மற்றும் சுப்பிரமணியசாமி உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளளனர்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மகிழ்ச்சியும், ஜெ.,வுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் இந்த தீர்ப்பை மதிக்கிறோம் என்றும், இதனை தீர்ப்பாகவே பார்க்க வேண்டும். அரசியலாக்க கூடாது என கூறியுள்ளார்.
சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவிக்கையில், வழக்கில் இப்படி தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை. தண்டனை கிடைத்திருந்தால் எனக்கு சந்தோசமாக இருந்திருக்கும். சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் நேரிடையாக செல்ல முடியாது. கர்நாடக அரசோ அல்லது அரசு வக்கீலோ அப்பீல் செய்ய முடியும். அவ்வாறு செய்தால் நான் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றார்.
ஜெ., தரப்பு வக்கீல் குமார் கூறுகையில், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. தி.மு.க.,வினர் போட்ட பொய் வழக்கில் ஆதாரம் இல்லை, குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. இதனால் வழக்கில் இருந்து ஜெ., உள்ளிட்டவர்கள் விடுதலை ஆகியுள்ளனர். என்றார்.
தமிழிசை சவுந்திரராஜன் : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில்; தமிழகத்தில் எந்த செயலாற்றலும் இல்லாமல் இருந்த நேரத்தில் அரசியல் கட்சியினர் நிலைப்பாடும் தள்ளாடுகிறது. சிந்தித்துச் செயல்பட வேண்டும். பலர் வேறுமாதிரி எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு வேறு மாதிரி வந்துள்ளது. இது கூட்டணி அணியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆச்சார்யா கடும் அதிர்ச்சி : அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி ஆஜரான ஆச்சார்யா கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். தீர்ப்பிற்கு பின்னர் அவர் கூறுகையில்,
தீர்ப்பின் முழு விவரமும் தெரிந்த பின்னரே தீர்ப்பு குறித்து பதில் அளிக்க முடியும. 'இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை நிரூபிக்கப்பட்டும் உள்ளன. பவானிசிங் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், கர்நாடக அரசு தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ஒருநாள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது.
இதனால், என்னால் முடிந்த அளவிற்கு அதற்கான ஆவணங்களை தயார் செய்து, ஒரே நாளில் அவசரமாக கோர்ட்டில் தாக்கல் செய்தேன். எது எப்படி இருப்பினும், தண்டனை ஒட்டு மொத்தமாக ரத்து ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,' என்றார்.
No comments:
Post a Comment