ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் என்கிற ஆனந்தன். தறிப்பட்டறை தொழிலாளி. அவரது மனைவி பூங்கொடி. கூலித்தொழிலாளி. இவர்களுடைய மகள் மஞ்சுளா (வயது 16). இவர் கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் –2 தேர்வு எழுதியிருந்தார்.
இந்த நிலையில் காலை 10 மணி அளவில் பிளஸ் –2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதனால் மஞ்சுளா வீட்டின் அருகில் இருந்த கம்ப்யூட்டர் மையத்துக்கு சென்று தன்னுடைய மதிப்பெண்ணை பார்த்தார். அப்போது தமிழ் –133, ஆங்கிலம் –138, இயற்பியல் –113, உயிரியல் –101, கணிதம் –80, வேதியியல்–99 என்று அனைத்து பாடங்களிலும் சேர்த்து மொத்தம் 664 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 1000 மதிப்பெண்களுக்கு மேல்வரும் என்று எதிர்பார்த்து இருந்த மஞ்சுளாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதுகுறித்து மஞ்சுளா தன்னுடைய தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தான் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளேன் என்று புலம்பியுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் கம்ப்யூட்டர் மையத்தில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டோமே என்று மனம் உடைந்த மஞ்சுளா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.
காளிதாஸ் வீட்டில் இருந்து கரும்புகை வந்தைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு மஞ்சுளாவின் உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதனால் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் மஞ்சுளாவின் உடல் முழுவதுமாக எரிந்து பரிதாபமாக இறந்தார்.
மதிப்பெண் குறைந்ததால் பிளஸ் –2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment