'அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்ய வேண்டும்' என, நெட், ஸ்லெட் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.
கல்வித்தகுதி:தேசிய கல்விக் கொள்கைப்படி, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) பரிந்துரைப்படி, கல்லுாரி உதவிப் பேராசிரியர்கள், நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 'நெட்' தேர்வு நிர்ணயிக்கப் பட்டது. அதேநேரம், 2009ல் புதிய விதிமுறையைப் பின்பற்றி, பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பு முடித்தோர், நெட் தேர்வு எழுத விதிவிலக்கு தரப்பட்டது.
இந்நிலையில், 2012ல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கு, 1,183 பேர் நியமிக்க, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்குப் பின், தற்காலிக தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், முறைகேடு கள் நடந்துள்ளதாகவும், டி.ஆர்.பி., நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, நெட், ஸ்லெட் சங்க ஆலோசகர் சாமிநாதன், இணைச் செயலர் தங்க முனியாண்டி ஆகியோர் கூறியதாவது:டி.ஆர்.பி.,யானது, பள்ளிக் கல்வித்துறை நியமனத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் மூலம், கல்லுாரி பேராசிரியர்களை நியமிக்க, உரிய நிபுணர்கள் இல்லை. அதேநேரம், டி.ஆர்.பி.,யின் தேர்வு நடவடிக்கை, பல்வேறு குழப்பங்களைக் கொண்டுள்ளது.
சட்டவிரோதம்: அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் நியமனத்தில், யு.ஜி.சி.,யின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. தேர்வு அறிவிப்பில், அனைத்து, பிஎச்.டி., பட்டதாரிகளுக்கும், ஸ்லெட், நெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் தரப்பட்டுஉள்ளது, சட்ட விரோதம். இதனால், 50 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த, 2009ம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்த விதிமுறைகளின்படி, பிஎச்.டி., பட்டம் பெற்ற வர்களுக்கு மட்டுமே, நெட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும். ஆனால்,பிஎச்.டி., முடித்த அனைவருக்கும் டி.ஆர்.பி., விலக்கு அளித்தது தவறானது. இதுகுறித்து, டி.ஆர்.பி.,க்கும், உயர்கல்வித் துறைக்கும் பல மனுக்கள் அனுப்பியும், டி.ஆர்.பி., கண்டுகொள்ளவில்லை. டி.ஆர்.பி.,யின் நடவடிக்கைகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
கடந்த, 2009 விதிகளின்படி, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் தவிர, மற்றவர்களுக்கு, நெட் தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இத்தேர்வை, உடனே ரத்து செய்து, புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில், டி.ஆர்.பி., மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
pla anybody know the phone numbers of mr thangamuniyandi and swaminathan sir pls post it
ReplyDelete