Pages

Tuesday, February 24, 2015

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்பாட்டம்

15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு நடவடிக்கை குழுவின் நிர்வாகி ரங்கராஜன், அகவிலைப்படி 100 சதவீதத்தை கடந்து விட்டதால் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 6வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழ் பாடத்தை கடைசியாக வரிசைப்படுத்தியுள்ள அரசாணை 266ஐ திருத்தி தமிழ்பாடத்தை முதலாவதாக வைத்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் தொடக்கப்பள்ளி முதல் மேனிலைப்பள்ளி வரை தமிழ் வழி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி டுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேபோல் புதுக்கோட்டையில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில செயலாளர் சத்திய மூர்த்தி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8 ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வராவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.
அரியலூரில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டு குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜ், தாய்மொழி தமிழை முதன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.