குரூப் - 2 தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழக சமூக நலத்துறையில் காலியாக உள்ள குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் பதவிக்கான 117 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. சென்னை, கோவை மற்றும் மதுரை என, மூன்று நகரங்களில் 15 மையங்களில், 4,009 பேர் தகுதி பெற்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது, பாலசுப்ரமணியன் கூறியதாவது: இந்தத் தேர்வுக்கு, மொத்தம் 4,461 பேர் விண்ணப்பித்து, 4,009 பேர் தேர்வுக்கு தகுதி பெற்றனர். குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களை மேற்பார்வையிடுதல், கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு கால நிதியுதவித் திட்டம் பயனாளிகளை சென்றடைகிறதா என்பதை கண்காணித்தல் போன்ற பணிகள் வழங்கப்படுகிறது.
குரூப் - 2 தேர்வு முடிவுகள், இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். குரூப் 4 தேர்வு முடிவுகள், இன்னும் ஒன்றரை மாத காலத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.