பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான தத்கல் திட்டத்தின் கீழ், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அரசு தேர்வுத்துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிப்., 5 முதல் 7 வரை நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும், அனைத்து தனித்தேர்வர்களுக்கும், சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
தனியார், பிரவுசிங் சென்டர்களில் விண்ணப்பிக்க முடியாது. அரசு தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் அறியலாம். எச் வகை தனித்தேர்வர்கள், ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய் கட்டணம் மற்றும் இதர கட்டணம், 35 ரூபாயும், எச்.பி., வகை நேரடி தனித்தேர்வர்கள், 150 மற்றும் 37 ரூபாய் என 187 ரூபாயும் கட்ட வேண்டும்.
இவற்றுடன் கூடுதலாக, சிறப்பு அனுமதி கட்டணம் 1,000 ரூபாய் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் 50 ரூபாயை பணமாக மட்டுமே, தேர்வுத்துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். எச் வகையினர், இதுவரை எழுதிய பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் நகல், பள்ளி மாணவராக பதிவுசெய்து தேர்வு எழுதாதவர்கள், தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற தகுதிச் சான்று, செய்முறை அடங்கிய பாடங்களுக்கு எழுதுவோர், மதிப்பெண்ணுக்கான ஆவணம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
எச் வகை நேரடி தனித்தேர்வர்கள், 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழின் அசல், வெளிமாநில தேர்வர்கள், இடம் பெயர்வு சான்றிதழின் அசலை இணைத்து அளிக்க வேண்டும். தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதற்கான நாட்கள், பின் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்
மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, ஏற்கனவே விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் பிப்., 2 முதல் 4ம் தேதி வரை, www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம், ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளத்திற்கு சென்று, HIGHER SECONDARY EXAM MARCH 2015- PRIVATE CANDIDATE HALL TICKET PRINT OUT என்ற வாசகத்தில் கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதை பதிவிறக்கம் செய்யலாம்.
செய்முறை அடங்கிய பாடங்களில், செய்முறை தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள், செய்முறை தேர்வை மீண்டும் செய்வதுடன், எழுத்து தேர்வுக்கும் வர வேண்டும். முதல் முறையாக, பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள - எச்.பி., வகை தேர்வர்கள், சிறப்பு மொழி எழுதும் தேர்வர்கள் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை, கண்டிப்பாக செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.