குழந்தைகளின் கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா) சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மாநில அளவில் கல்வியின் தரம் பாதிக்கப்படும்; இதை தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
துவக்க நிலையில் உள்ள குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை போக்க, கல்வித்துறை சார்பில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வெவ்வேறு முறைகளில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினாலும், ஓரிரண்டு வகுப்புகளை கடந்தபின், அவற்றை மாணவர்கள் மறந்து விடுகின்றனர்.
குழந்தைகளின் கற்றல் குறைபாடு, அறிவியல் ரீதியாக 5 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. டிஸ்லெக்சியா எனப்படும் மொழித்திறன் கற்றல் பயிற்சி குறைபாடு, டிஸ்கிராபியா எனும் மொழித்திறன் எழுத்து பயிற்சி குறைபாடு, டிஸ்கால்குளியா எனப்படும் கணித அடிப்படை குறைபாடு, டிஸ்பாசியா எனும் வரைதல் குறைபாடு மற்றும் டிஸ்பெக்சியா எனப்படும் தன்னம்பிக்கை குறைபாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இக்குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள், கற்றலில் பின்தங்குகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இக்குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, கல்வித்துறை ஆய்வு கூறுகிறது. ஒரு வகுப்பில் 60:4 என்ற விகிதத்தில் இருந்த இக்குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, தற்போது, 50:10 என்ற விகிதமாக உயர்ந்துள்ளது.
கட்டுப்பாடற்ற மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம், இக்குறைபாட்டை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், மாறிப்போன உணவு பழக்கம் போன்றவை, குழந்தைகளுக்கு இதுபோன்ற குறைபாடு ஏற்பட காரணமாகிறது.
கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் மூலம் பல்வேறு விளையாட்டு பயிற்சி, கற்றல் திறன் மேம்படுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனினும், துவக்கநிலை வகுப்புகளிலேயே குழந்தைகளின் இக்குறைபாட்டை கண்டறிந்தால், எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், "கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால், மாநில அளவில் கல்வித்தரம் பாதிக்கப்படும். கல்வித்துறையினர் ஆய்வு நடத்தி, பாதிப்புள்ள குழந்தைகளுக்கு தொடர் பயிற்சி அளித்து, இக்குறைபாட்டை களைய வேண்டும்" என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.