Pages

Monday, December 22, 2014

கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவு செய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும்போது, அவர்களின் வாரிசுகள் 18 வயது நிறைவடைவதற்கு முன்பே அரசுப் பணிக்கு விண்ணப்பித்து அதில் சேரும் நிலை இருந்து வருகிறது. ஆனால், அரசுப் பணியில் புதிதாக சேர்பவர்கள் அந்தப் பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றிருப்பதுடன் 18 வயதையும் நிறைவு செய்திருக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை கடந்த 2005-இல் வெளியிட்டது. இதன்படி, கருணை அடிப்படையிலான பணிக்கான மனுவை, சம்பந்தப்பட்ட வாரிசுதாரர் மூன்று ஆண்டுகளுக்குள் அளிக்க வேண்டும். மேலும், 18 வயது நிரம்பிய வாரிசுதாரர் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனம் பெறத் தகுதியானவர் எனவும், மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பம் அளிக்கும் நாளை கணக்கில் கொண்டு வயது, கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிக்கல் எங்கே எழுந்தது?: பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை 2005-ஆம் ஆண்டில் உத்தரவை வெளியிட்ட நிலையில், தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையானது கடந்த 2010-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதியன்று மற்றொரு அறிவுறுத்தலை வழங்கியது. அதன்படி, உத்தரவு வெளியான தினத்தில் (மே 2010) 18 வயது நிரம்பியிருந்தால் கருணை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்புத் துறை அறிவித்தது.
இதனால், பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை உத்தரவு வெளியிட்ட காலத்துக்கும், வேலைவாய்ப்புத் துறை வெளியிட்ட உத்தரவுக்கும் இடைப்பட்ட காலத்தில், விண்ணப்ப நாளின்போது 18 வயதை நிறைவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்குமா அல்லது வேலை கிடைத்தவர்களின் நிலை என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை செயலாளர் எம்.வீரசண்முகமணி புதிய தெளிவுரையை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.