சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்போன் வாட்ஸ் அப்பில் இளம் பெண் ஒருவரின் போட்டோவுடன் பரபரப்பான தகவல் ஒன்று பரப்பப்பட்டது. குடும்ப பெண் போன்ற தோற்றத்தில் இருந்த அப்பெண் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர் போல கழுத்தில் அடையாள அட்டை ஒன்றையும் அணிந்திருந்தார்.
வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நைசாக பேசி குளோரா பார்ம் கொடுத்து கொள்ளையடிப்பவர் இப்பெண். எனவே உஷாராக இருங்கள் என்று வாட்ஸ் அப் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனுடன் துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமாரின் செல்போன் நம்பரும் இணைத்து அனுப்பப்பட்டதுடன், துரைப்பாக்கம் பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்ஸ்பெக்டர் மகேஸ் குமாரின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பலரும் விசாரித்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பெண்ணின் போட்டோவுடன் விளக்கம் ஒன்று வாட்ஸ் அப்பிலேயே வந்தது.
மும்பையில் வசிக்கும் எண்ணைப் பற்றி, யாரோ தவறான தகவலை பரப்பியுள்ளனர். இதுபற்றி தானே சைபர் கிரைம் போலீசில் நான் புகார் செய்துள்ளேன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பின்னரே அப்பெண்ணை பற்றி யாரோ மும்பையில் பரப்பிய அவதூறு தகவல் ‘‘வாட்ஸ் அப்’’பில் சென்னை வரை பரவி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
இந்த அவதூறு தகவலை போலீசார் சிலரே வாட்ஸ் அப் குருப்பில் அனுப்பி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் சூடு பிடித்தது.
இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். மத்திய குற்றபிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சைபர் கிரைம் போலீசில் பணிபுரியும் பெண் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனுக்கும் இந்த தகவல் வந்துள்ளது. இதையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66–ஏ–ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார், கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் முனுசாமி, பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோரை அழைத்து கமிஷனர் ஜார்ஜ் விசாரணை நடத்தினார். அப்போது 3 பேரும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தகவல்களை அனுப்பியதாக கூறினர்.
இதையடுத்து, எந்த ஒரு தகவலையும் சரியாக விசாரிக்காமல் பரப்பக்கூடாது என்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை, சென்னையில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரின் செல்போன் நம்பரை அப்பெண்ணின் போட்டோவுடன் இணைத்து அனுப்பியது யார்? என்பதே மிகப் பெரிய கேள்வியாக உறுவெடுத்துள்ளது. அந்த ஆசாமியை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment