Pages

Saturday, November 29, 2014

துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால் மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்: ஆய்வு

நரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும் என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.


மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்த, புது யுக்திகளை பயன்படுத்த, காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, திண்டுக்கல் தனியார் பள்ளியில், 45 மாணவர்களிடம், கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் நர்மதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மாணவர்களின் எடை, ரத்தம், உணவுப் பழக்கம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நரம்பு செல்களில், துத்தநாகம் குறைந்த மாணவர்களின் அறிவு, கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அவர்கள், துத்தநாக சத்து குறைந்த உணவுகளை உட்கொள்வதால் இந்தநிலை ஏற்பட்டதாக தெரியவந்தது. மாணவர்களின் உணவுப் பழக்கத்திற்கும், அறிவுத்திறனுக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்துள்ளது.

பேராசிரியர் ஜாகிதாபேகம் கூறியதாவது: துத்தநாகம், நரம்பு செல்களுக்கு இடையேயுள்ள பொருள். நரம்பு மண்டலத்தில், நியூரான்கள் உருவாகவும், இடம் பெயர்தலுக்கும் பயன்படுகிறது. உடலில், 2.3 கிராம் அளவிற்கு இருக்கும். சிறந்த, ஆக்சிஜனேற்றியாக உள்ளதால், மூளைக்கு தங்குதடையின்றி தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது.

இது குறைந்தால், மாணவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படுகிறது. உடம்பிற்கு, துத்தநாகம் குறைந்த அளவே தேவைப்பட்டாலும், மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதது. அவித்த முட்டை, பாசிப்பயிறு, பருப்பு வகைகளில் துத்தநாக சத்து உள்ளதால், அதை மாணவர்களுக்கு வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.