அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங்கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற்றை நம்ப வேண்டாம் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகள், கல்லூரிகள் என, எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம், பாடங்களுக்கான அனுமதி என அனைத்தும் யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.
நாடு முழுவதும் செயல்படும், பல்கலைகள், அவை அனுமதி பெற்றுள்ள வரம்பிற்குள் மட்டுமே, கல்வி வளாகங்கள், கல்வி மையங்களை அமைக்க முடியும். வரம்பை தாண்டி கல்வி மையங்களை அமைக்கக் கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
மேலும், அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற மையங்கள் என செயல்படும் சிறிய கல்வி மையங்கள் பல, அனுமதி பெறாத பல படிப்புகளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இப்புகார்கள் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலை 12ம் தேதி, இதுகுறித்த பொது அறிவிப்பு ஒன்றை யு.ஜி.சி., வெளியிட்டது.
இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத கல்வி மையங்கள், வளாக மையங்கள் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை யு.ஜி.சி., கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் அதே பொது அறிவிப்பை யு.ஜி.சி., வெளியிட்டு, இதுபோன்ற அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களில் சேர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment