ஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின் கிஷன் ஆகியோருக்கு, இம்முறை, ’ஹொய்சாலா விருது’ வழங்கப்படுகிறது.
குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில், தாய் இறந்து விட்டாலும், மன உறுதியை கைவிடாமல், தன், 8 மாத தம்பியை தூக்கிக் கொண்டு, இரவு வேளையில், அபாயமான கிருஷ்ணா நதி ரயில்வே பாலத்தை தாண்டி வந்த, முத்தோலின் சுமித்குமார் சிந்தகி; மலையேறும் சாகசத்தில் ஈடுபட்டபோது, வழுக்கி விழுந்த நண்பனை காப்பாற்றிய அனூப், ஸ்வரூப்; கல்லால் சிறுத்தையை அடித்து விரட்டி, இருவரை காப்பாற்றிய குண்டுலுபேட்டை தாலுகா குந்தகெரேயை சேர்ந்த அப்பு; வாகன விபத்தில், சிக்கிக் கொண்டிருந்த தன்னுடன் படிக்கும் மாணவர்களை காப்பாற்றிய, மாகடி தாலுகாவின் குதூரு கிராமத்தின் சஹகேஷ் ஆகியோருக்கும் ’ஹொய்சாலா’ விருது வழங்கப்படுகிறது.
கரும்பு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, விபத்தில் சிக்கியவர்களை மீட்ட, விஜாபூரின் பூர்ணிமா; ஏரியில் தவறி விழுந்த, 10 வயது சிறுவனை காப்பாற்றிய சோமவாரபேட்டையின் சாந்தி ஆகியோருக்கு, சிறுமியருக்கு வழங்கும் வீரசாகச விருதான, ’சென்னம்மா’ விருது வழங்கப்படுகிறது. குழந்தைகள் தினமான இன்று, விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர். இவ்விருது, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கேடயம், சான்றிதழ் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.