Pages

Friday, November 14, 2014

ஆதார் அட்டை பதிவுக்கு 469 நிரந்தர முகாம்கள்

தமிழகத்தில் ஆதார் அட்டைக்கான பயோ-மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் நிரந்தர முகாம்கள் அனைத்தையும் சனிக்கிழமைக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஆதார் அட்டைக்கான பயோ-மெட்ரிக் பதிவு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. பின்னர் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பணி மந்தமாகியது. இந்த நிலையில் மீண்டும் ஆதார் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்ததையடுத்து இப்போது மீண்டும் பயோ-மெட்ரிக் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் கூறியது: சில காரணங்களால் பயோ-மெட்ரிக் பதிவு செய்யும் பணி மந்தமாக இருந்தது. இப்போது கடவுச்சீட்டு, குடும்ப அட்டை போன்ற அத்தியாவசிய ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது குறித்து மத்திய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனால் மீண்டும் ஆதார் அட்டை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பயோ-மெட்ரிக் பதிவு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் மட்டுமே இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் பதிவு செய்ய நிரந்தர முகாம்கள் அமைக்கும் பணி நடக்கின்றன. நவம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 268 இடங்களில் நிரந்தர முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சியாக இருந்தால் மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 469 நிரந்தர முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில்...: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை 50 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் 18 முகாம்கள் அமைக்கும் பணி நிறைவுபெற்று செயல்பாட்டில் உள்ளன. அவை மண்டல அலுவலகங்கள், யூனிட் அலுவலகங்கள் (4-5 வார்டுகள் சேர்ந்த அலுவலகம்) ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. வரும் சனிக்கிழமைக்குள் தமிழகம் முழுவதும் அனைத்து நிரந்தர முகாம்களும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
முன்னர் செயல்பாட்டில் இருந்த தாற்காலிக முகாம்களில், பயோ-மெட்ரிக் பதிவுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு சென்னைக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும். பின்னர் விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் கணினியில் பதிவேற்றப்பட்டு, அதன் பின்னர் மீண்டும் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு அனுப்பப்படும். அதன் பின்னரே விண்ணப்பதாரரிடம் பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படும்.
ஆனால் நிரந்தர முகாம்களில் விண்ணப்பம் பெறும் மையத்திலேயே தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதனால் ஓரிரு நாள்களில் பொதுமக்கள் பயோ-மெட்ரிக் பதிவு செய்து கொள்ளலாம். இதனால் கால விரயம் குறையும்.
4.5 கோடி பேருக்கு அட்டைகள்: தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 8 ஆயிரத்து 18 பேரின் பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 4 கோடியே 67 லட்சம் பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் 25.94 லட்சம் பேரிடம் பயோ-மெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது 62.47 சதவீதமாகும்.
80 சதவீதத்துக்கு மேல் பணி முடிந்த மாவட்டங்கள்:
மாவட்டம் சதவீதம்
பெரம்பலூர் 89.23
ராமநாதபுரம் 85.65
அரியலூர் 85.56
திருச்சி 81.61
நாகப்பட்டினம் 81.54

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.