மதுரையில் இரண்டு மாநகராட்சி பள்ளிகளில் முன்மாதிரியாக, மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சொக்கிகுளம் காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் பிபிகுளம் பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான முயற்சியை கமிஷனர் கதிரவன் துவக்கியுள்ளார்.
இதுகுறித்து, மாநகராட்சி கழிவுநீர் புல் பண்ணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: விவசாயத்தை, காய்கறி உற்பத்தியை மாணவர்கள் அறியும் வகையில், கமிஷனர்தான் ஏற்பாடு செய்தார். முதற்கட்டமாக இரு பள்ளிகளை தேர்ந்தெடுத்தோம். வாடிப்பட்டி அக்ரீடு தொண்டு நிறுவனம் மூலம் காய்கறி வளர்ப்பதற்கான பைகள், தென்னை நார் கழிவு, உரங்களை இலவசமாக பெற்றோம். பள்ளிக்கு தலா 50 பைகள் வீதம் ஓரளவு வளர்ந்த செடி நாற்றுகளை தந்தோம்.
தற்போது இரு மாதங்களாக காற்கறிகள் வளர்ந்து வருகின்றன. செடி வளர்ப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அடுத்தகட்டமாக மாணவர்களும் இதில் ஈடுபடலாம். சாப்பிடும் காய்கறிகள் எப்படி காய்க்கிறது என்பதை மாணவர்களும் தெரிந்துகொள்ள முடிகிறது. இதையே ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் கடைபிடிக்கலாம், என்றார்.
காக்கை பாடினியார் பள்ளி தலைமையாசிரியை எழிலரசி கூறுகையில், "கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தவரை, கீரை, பச்சை மிளகாய் செடிகள் உள்ளன. தினமும் கிடைக்கும் காய்களை பறித்து, சத்துணவு சமைப்பதற்கு தருகிறோம். ஆசிரியர்கள் ஆர்வமாக செடிகளை வளர்க்கின்றனர். தேசிய பசுமைப்படை, எஸ்.எஸ்.எஸ்., மாணவிகளைக் கொண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். மாணவிகளுக்கும் செடிகளைப் பார்ப்பதில் தனி சந்தோஷம்" என்றார்.
No comments:
Post a Comment