சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழாசிரியர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. அன்னுார் அடுத்த சொக்கம்பாளையம் கிராமத்திற்கு 1934ம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை புரிந்தார். அதை நினைவுகூரும் வகையில், அரசு மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது. தற்போது அந்த பள்ளியில் 900 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 250 மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பல மாதங்களாக முதுகலை தமிழ் ஆசிரியர் இல்லை. இதனால் மாணவர்கள் தமிழ் படிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அந்த வகுப்புகளுக்கு பாட வேளை இல்லாத நேரங்களில், மேனிலை வகுப்புகளுக்கு சென்று கற்பிக்கின்றனர்.
பெற்றோர் கூறுகையில், “அன்னுாரிலிருந்து 3 கி.மீ., தொலைவில் பள்ளி உள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பஸ்தான் உள்ளது. எனவே, கவுன்சிலிங் சமயத்தில் இப்பள்ளியில் எந்த பாடத்திற்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தாலும், வேறு பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் வருவதில்லை.
தமிழாசிரியர் பணியிடம் காலியாகி பல மாதங்களாகியும், பஸ் வசதி இல்லாததால் வேறு பள்ளியிலிருந்து ஆசிரியர் இங்கு வரவில்லை. மாவட்ட கல்வி நிர்வாகம் உடனே பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுகலை தமிழாசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்" என்றனர்.
No comments:
Post a Comment