அங்கன்வாடி மையங்களில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்படுவதாக, பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் 143 அங்கன்வாடிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். குழந்தைகளுக்கு மதிய உணவு, ஊட்டச்சத்து உணவு வழங்குதல்; உடல்நல பாதுகாப்பு குறித்த மருத்துவ முகாம், குழந்தைகளின் சிந்தனைகளை தூண்டும் வகையில் விளையாட்டுகளை கற்பித்தல், பள்ளி முன்பருவ காலத்தில் அடிப்படை கல்வி, அன்றாட பழக்கங்கள் போன்றவை, அங்கன்வாடி மையங்களில் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு அங்கன்வாடியிலும், அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் என இரண்டு பணியிடங்கள் உள்ளன. தற்போது, பெரும்பாலான அங்கன்வாடிகளில் உதவியாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், கூடுதல் பணிச்சுமையால் அங்கன்வாடி பணியாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை பகுதியில், 41 அங்கன்வாடிகளில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், குழந்தைகளை பாதுகாப்பதிலும், கற்பிப்பதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை என அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது, அடிப்படை கல்வியை கற்பிப்பது போன்ற செயல்பாடுகள் தடைபடுவதாக, பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். காலியாக உள்ள அங்கன்வாடி மைய உதவியாளர் பணியிடங்களை நிரப்பி, குழந்தைகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, "காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றனர்.
No comments:
Post a Comment