ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கான மதிப்பெண் தளர்வு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கோரி சென்னையில் புதனன்று (அக்.8) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விலும் அதன் அடிப்படையிலான பணி நியமனங்களிலும் சமூக அநீதி தொடர்வதாக குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் மதுரை, சேலம் ஆகிய மையங்களிலும் நடைபெற்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறானாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்தை நடத்தின. ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் தளர்வை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது. அரசு தனது முடிவுக்கான புள்ளி விவர ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்புக்குக் காரணமாகக் கூறியுள்ளது.
தகுந்த ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்ய வேண்டிய அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது அரசாணையால் பயனடைந்து தேர்வு பெற்றவர்களின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.இந்தத் தேர்வின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறை நியாயமற்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இது ஆசிரியர் பணிக்கு வரும் முதல் தலைமுறையினர் பின்னுக்குத் தள்ளப்படவும், அவர்களது வாய்ப்புகள் மறுக்கப்படவுமே இட்டுச் செல்லும் என்று எடுத்துக் கூறிய இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை திருப்பப் பெற வலியுறுத்தப்பட்டது.ஆசிரியர் பணிகளில் இடஒதுக்கீட்டு பிரிவில் - குறிப்பாக பழங்குடியினர் பிரிவில் - ஏற்பட்டுள்ள காலி பின்னடைவு இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
தகுதித்தேர்வு, பணிநியமனம் ஆகிய நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சீராய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், தகுதி படைத்த அனைத்து ஆசிரியர்களும் அரசுப் பணியில் சேர வாய்ப்பளிக்கும் வகையில் ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும், வழக்குகளை முடிவுக்கு கொண்டுவந்து மாணவர்கள் சுமூகமாகக் கல்வி கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரை ஆற்றிய மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பெ. சண்முகம், “ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்றால் போராட்டக்குழு சார்பில் வழக்கு தொடுக்கப்படும்,” என்று கூறினார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், “தனிமனிதருக்கும் நீதிமன்றத்துக்குமான போராட்டமாகவே தொடர்கிறது, அரசாங்கம் மூன்றாவது நபராக வேடிக்கை பார்க்கிறது,” என்றார்.தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான 2012 ஆண்டுச் சட்டத்தில் தகுதித்தேர்வு பற்றி சொல்லப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, “இந்தத் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு ரத்து என்பது சமூக நீதிக்கு எதிரானது,” என்றார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொருளாளர் ஆர். ஜெயராமன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. உச்சிமாகாளி, மாணவர் - பெற்றோர் நலச் சங்க பொதுச்செயலாளர் அருமைநாதன், மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் செயலாளர் நம்புராஜன், சந்திர குமார், மலைவாழ் மக்கள் சங்கத்தின் முருகேசன், பெருமாள், அழகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பாரதிஅண்ணா, எழிலரசன், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கிருஷ்ணா ஆகியோரும் உரையாற்றினர். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார் எஸ்.கே. சிவா நன்றி கூறினார்.
அதிகாரியுடன் சந்திப்பு
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பெ. சண்முகம் தலைமையில் போராட்டக் குழு தலைவர்கள் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் செல்வராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட செல்வராஜ், நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்த பின் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாகவும், அதில் இக்கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment