"தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தில்லி ராஜபாதை சாலையில் வியாழக்கிழமை காலை நடைப்பயண பிரசாரத்தை அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
குடியரசு தினத்தின்போது ராஜபாதை சாலையில் செய்யப்படும் இணையான பாதுகாப்பு தற்போது போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வான்பகுதிப் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு தயாராகும் வகையில், மத்திய அரசின் முக்கிய அலுவலகங்கள் புதன்கிழமை பிற்பகல் முதலே மூடப்பட்டன. இது தொடர்பாக தில்லி போலீஸ் அதிகாரி கூறியதாவது:
நார்த் பிளாக், செüத் பிளாக், க்ருஷி பவன், சாஸ்திரி பவன், ரயில் பவன், யோஜனா பவன் ஆகியன புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கே மூடப்பட்டன. இதேபோல, குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்டவை இரவு 10 மணிக்கு மூடப்பட்டன. இவை வியாழக்கிழமை காலை 10.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். ராஜபாதை அருகே உள்ள அரசு அலுலக கட்டடங்கள் மீதும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.
தில்லியில் ரஃபி மார்க், ராஜபாதை பகுதிகளை இணைக்கும் இடத்தில் "தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைப்பதையொட்டி அந்த இடங்களுக்கு அருகே உள்ள சென்ட்ரல் செக்ரட்டேரியேட், உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்கள் அன்று காலையில் இரண்டு மணி நேரம் வரை மூடப்பட்டிருக்கும். "பாதுகாப்பு காரணங்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.
இது குறித்து டிஎம்ஆர்சி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநர் அனுஜ் தயாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்ட்ரல் செக்ரடேரியேட், உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை 7.15 முதல் 7.45 மணி வரை மட்டும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர். காலை 7.45 முதல் 10.05 மணி வரை பயணிகள் உள்ளே, வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நேரத்தில் ஜஹாங்கீர்புரி - ஹூடா சிட்டி சென்டர், சென்ட்ரல் செகரட்டேரியேட் - பதர்பூர் இடையே செல்லும் அனைத்து ரயில்களும் இந்த ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும். மற்ற பாதைகளில் வழக்கம்போல் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கும்' என்றார்.
No comments:
Post a Comment