டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு போதிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:நான் நோயாளியும் அல்ல, சிறந்த டாக்டரும் அல்ல. பின் ஏன் என்னை இந்த விழாவுக்கு அழைத்தீர்கள். என் பள்ளிப் பிராயத்தில் நான் சிறந்த மாணவனாக விளங்கவில்லை, எந்த ஒரு பரிசையும் பெற்றதில்லை; ஆனால், கற்பதை மட்டும் நிறுத்தவில்லை.
தொடர்ந்து கற்பதால் மட்டுமே பலன் கிடைக்கும். ஒருபோதும் உங்களுக்குள் இருக்கும் மாணவனை மறந்து விடாதீர்கள். நீங்கள் போதுமான அளவு படித்துவிட்டதாக எண்ண வேண்டாம். தொடர்ந்து கற்க வேண்டும் என்ற ஆர்வமே வாழ்வை முன்னேற்றும் உந்து சக்தியாக அமையும். தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள், பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, நாட்டு மக்களுக்கு உதவுங்கள்.
நாட்டின் கோடான கோடி மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சிகிச்சையை நம்பியே உள்ளனர். அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment