ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளிகளில் பணிபுரியும் விடுதி காப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகள் ஆகியோருக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
இதில், கலெக்டர் பிரபாகரன் பேசியதாவது: விடுதி மாணவ, மாணவியர் பெற்றோருடன் செலவழிக்கும் நேரத்தை விட, விடுதி காப்பாளர்களாகிய உங்களது கண்காணிப்பில், அதிக நேரம் இருக்கின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியருக்கு விடுதியை சுத்தமாக பராமரிக்கும் முறைகள், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், பிளாஸ்டிக் உபயோகத்தினை தவிர்த்தல் ஆகியவைகளை எடுத்துரைக்க வேண்டும்.
மாணவ, மாணவியருக்கு நற்பண்புகளை கற்றுத்தர வேண்டும். மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதிகளில், மரங்களை நட்டு இயற்கையை மேம்படுத்த வேண்டும், என்றார்.
64 விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகள் பங்கேற்றனர். வீட்டு வசதி வாரிய மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பயிற்றுனர் மைக்கேல்பாரதி, அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவன ஆவண பதிவாளர் ஜெகநாதன், தாசில்தார் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment