அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்வுக்கான, 50 மதிப்பெண்ணில், 40 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மூன்று ஆண்டு பணி நியமனம் தொடர்பான வழிமுறைகளை, பள்ளிக்கல்வித் துறை செயலர், சபிதா வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கல்வி மாவட்ட அளவில், மூன்று ஆண்டுகள், முறையாக பணி முடித்த, பதிவறை எழுத்தர் (ரெக்கார்டு கிளர்க்) மற்றும் அடிப்படை பணியாளர்களுள், ஆய்வக உதவியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட, 10ம் வகுப்பு கல்வித் தகுதியை பெற்று உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியலை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் தயாரிக்க வேண்டும்.
இன சுழற்சி முறை: நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, தகுதியானவர்களுக்கு, பணி மாறுதல் வழங்க வேண்டும். இந்த முறையில் நிரம்பிய இடங்கள் போக, மீதியுள்ள இடங்களை நிரப்ப, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, பட்டியலை பெற்று, நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். இன சுழற்சி, வயது வரம்பு உள்ளிட்ட விதிகளை பின்பற்றி, பதிவுதாரர் பட்டியலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.
பின், பட்டியலில் இடம்பெறும் பதிவுதாரர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
குழு விவரம்
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நேர்முகத் தேர்வு குழுவின் தலைவர்.
நேர்முக தேர்வுக்கு, 40 மதிப்பெண் ஒதுக்கீடு மாவட்ட கல்வி அலுவலர், செயலர்.
ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகியோர், உறுப்பினர்களாக இருப்பர்.
வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமைக்கு, அதிகபட்சமாக, 5 மதிப்பெண், உயர்கல்வி தகுதி (பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பு) இருந்தால், அதற்கு, 5 மதிப்பெண் வழங்க வேண்டும்.
மேலும், நேர்முகத் தேர்வு குழு தலைவர், செயலர், உறுப்பினர்கள் ஆகிய நான்கு பேரும், தலா, 10 மதிப்பெண் வீதம், 40 மதிப்பெண் வழங்குவர்.
மொத்தம், 50 மதிப்பெண் அடிப்படை யில், தகுதி வாய்ந்தவர்களை, தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு, சபிதா தெரிவித்து உள்ளார்.
நேர்மையாக நடக்குமா?:
நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் அதிகபட்சமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், இந்த மதிப்பெண் தான், நியமனத்தை தீர்மானிக்கும்.
மாவட்ட அளவில், கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியரும் சேர்ந்து நடத்தும் நேர்முகத் தேர்வு, நேர்மையான முறையில் நடக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.
கல்வியாளர் கருத்து:
இதுகுறித்து, கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகை யில், ”நேர்முகத் தேர்வுக்கு, 40 மதிப்பெண் என்பது, நியாயம் கிடையாது. ஒன்று, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டும், பணி நியமனம் நடக்க வேண்டும். இல்லை எனில், போட்டித்தேர்வு மூலம், தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்,” என்றார்.
2 comments:
மக்கள் முதல்வர் ஜெயலலிதா உள்ளே இருக்கும் சமயம் பார்த்து கல்வித்துரை அதிகாரிகள் கொள்ளைஅடிக்க ஆரம்பித்து விட்டனர் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்வதாக தகவல்கள் வந்துள்ளது.OPS the HONBLE CM of Tamil Nadu be உஷார். Anti curruption bureau be ready for an attack. People opine that Madame Mrs.Sabitha Principal Secretary to Education Department is accountable for any misappropriation in this recruitment of Lab ASSISTANTS
Post a Comment