இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, இரு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கும், ஜெர்மன் விஞ்ஞானிக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருது என கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பெட்ஜிக், 54, வில்லியம் மோர்னர், 61, மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ஸ்டீபன் ஹெல், 51, ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. மைக்ரோஸ்கோப் எனப்படும் நுண்ணுயிர் நோக்கியின் திறம்பட்ட செயல்பாட்டிற்கான விஞ்ஞான ஆராய்ச்சிக்காக, இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானி பெட்ஜிக், அமெரிக்காவின் விர்ஜினியா நகரில் உள்ள ஹோவர்டு ஹக்ஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றி வருகிறார். வில்லியம் மோர்னர், கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஜெர்மானியரான ஹெல், கோட்டின்ஜென் நகரில் உள்ள ஆராய்ச்சி கூடம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு, இன்று அறிவிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment