தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் கூட்டம் அலை மோதுகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள் அமைதியாக சென்று வரவும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உதவி கமிஷனர் விஜய ராகவன், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணசாமி, அப்பாத்துரை ஆகியோரது தலைமையில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாண்டிபஜார், பனகல் பார்க், பர்கீட் சாலை உள்ளிட்ட பகுதியில் சாதாரண நிலையில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு சந்திப்பு, ரெயில் நிலையம் அருகில் மற்றும் உஸ்மான் ரோட்டில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்தபடியே பைனாகுலர் மூலமும் கண்காணிக்கிறார்கள்.
பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 1 லட்சம் துண்டு பிரசுரங்களை அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். இந்த துண்டு பிரசுரங்களில் பொது மக்களுக்கு பயனுள்ள 13 அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன.
அதில் முக்கியமான சில அறிவுரைகள் வருமாறு:–
* பிக்பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க உஷாராக இருக்க வேண்டும்.
* பெண்கள் அணிந்து வரும் நகைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாக கூறினால் கண்டு கொள்ளாதீர்கள்.
* செல்போனில் பேசும் போது உடமைகள் மீதும், குழந்தைகள் மீதும் கவனமாக இருக்க வேண்டும்.
* சந்தேக நபர்களாக யாரையாவது கருதினால் 044–4235 2608 என்ற எண்ணிலும், 9498100176 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment