ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பணி நியமன கவுன்சலிங் நடந்தது. இதற்கிடையே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பட்டதாரிகள் சிலர் வழக்கு தொடர்ந்து தடை கேட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணி நியமன கவுன்சலிங் நடத்தலாம். ஆனால் பணியில் யாரும் சேரக்கூடாது என்று உத்தரவிட்டது. அதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் சிலர் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். மேற்கண்ட இரண்டு வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, கவுன்சலிங்கில் பணி இடங்களை தேர்வு செய்தவர்கள் நேற்று மதியமே அந்தந்த மையங்களுக்கு சென்று பணி நியமன உத்தரவுகளை பெற்றுக் கொண்டு உடனடியாக பணியில் சேரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கவுன்சலிங்கில் கலந்து கொண்டு பணியிடங்களை தேர்வு செய்தவர்கள் அனைவருக்கும் 25ம் தேதி பிற்பகல் முதல் அந்தந்த கவுன்சலிங் மையங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் அந்தந்த மையங்களுக்கு சென்று பணி நியமன ஆணைகளை பெற்று, பணி நியமனம் பெற்ற பள்ளிகளில் உடனடியாக பணியில் சேர வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று மதியம் அந்தந்த கவுன்சலிங் மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்று பணி நியமன ஆணைகளை பெற்றுச் சென்றனர். பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் இன்று முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.