தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியரிடம் அறிவியல் திறனை வளர்க்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக பாடுப்பட்டு வருகிறார்,'' என, கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பூனாட்சி தெரிவித்தார். இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் சார்பில், திருச்சி சிவானி பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நிறைவு விழா நடந்தது.
விழாவில், அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில், முதலிடம் பிடித்த, 41 மாணவ, மாணவியருக்கு தங்கப் பதக்கங்களை வழங்கிய, அமைச்சர் பூனாட்சி பேசியதாவது:
தமிழகத்தில் தான் கல்விக்காக அதிக திட்டங்கள், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை படிக்கும், மாணவ, மாணவியர்களிடத்தில், அறிவியல் திறனை வளர்க்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக பாடுப்பட்டு வருகிறார். தமிழகத்தில், 48 ஆயிரத்து, 552 மாணவர்கள் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது பெற்றுள்ளனர். கடந்த, 2013-14 ஆண்டுக்கு, 9,087 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, அறிவியல் படைப்புகளை உருவாக்க தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதன் மூலம், உருவாக்கப்பட்ட அறிவியல் படைப்புகளை கொண்டு, கடந்த இரண்டு மாதங்களில் மாவட்ட அளவிலான, அறிவியல் கண்காட்சியில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், தேர்வு செய்யப்பட்ட, 682 மாணவ, மாணவியர், தற்போது நடந்து வரும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை வைத்ததில், தேசிய அளவிலான கண்காட்சிக்கு, 41 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், வரும் அக்டோபர், 6 மற்றும் 7ம் தேதிகளில் டில்லியில் நடைபெறும், அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். அரசு தலைமை கொறடா மனோகரன், எம்.பி., ரத்தினவேல், உயர்கல்வி துறை துணை செயலாளர் கோபால், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் அய்யம்பெருமாள், இணை இயக்குநர் சௌந்திரராஜ பெருமாள், சிவானி கல்வி குழும தலைவர் செல்வராஜ், லால்குடி மாவட்ட கல்வி அலுவலர் தண்டபாணி, அறிவியல் அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment