Pages

Tuesday, September 30, 2014

படித்து பட்டம் பெற்றாலும் திறமையும், தகுதியும் தேவை!

வேலைவாய்ப்பு தேடி காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, தமிழகம் மட்டும் அல்ல; நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது. தாங்கள் படித்த கல்விக்கு ஏற்ப, வருமான அளவை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.


குறிப்பாக, பொறியியல் படிப்பு படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள், வேலைவாய்ப்பு சந்தை யில் குவிந்துள்ளனர். வேலை கிடைத்தாலோ அதிக சம்பளம், எதிர்காலம் வளமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் மாறி விடுகிறது.
பொறியியல் படிப்பில், அதிக மதிப்பெண்கள், திறனறி போட்டிகளில் தேர்வு பெறும் தன்மை, நேர்முக தேர்வுகளில் சமாளிக்கும் திறன் ஆகிய அனைத்தும், தேவைப்படும் நிலை இப்போது வந்து விட்டது. இதனால் சிலர், வங்கிப் பணிகள் அல்லது அரசுப் பணி தேர்வுகளையும் எழுதத் துவங்கி விட்டனர். நாட்டின் கவுரவமான எரிசக்தி துறை நிறுவனத் தலைமை நிர்வாகி ஒருவர், தன் நிறுவனம் எதிர்பார்க்கும் விஷயங்களை, வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
'பொறியியல் பட்டதாரியின் மதிப்பெண்கள், கணினியில் அதிக தேர்ச்சி, பணியில் சேர்ந்தால் திறனுடன் உடனடியாக முடிவெடுக்கும் சுபாவம், சக ஊழியர்களுடன் தகவல் பரிமாற்ற திறன், குழு உணர்வு, அரைகுறையாக காலந்தள்ள விரும்பாமை போன்ற அம்சங்கள் இருக்கிறதா என்று, அலசப்பட்டு பணி தரப்படுகிறது' என்கிறார்.
இது மட்டும் அல்ல; பணியில் ஒருவர் சேர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில், அவரால், அந்த நிறுவனத்திற்கு என்ன பயன், சந்தைப் போட்டிகளில் சமாளிக்கும் திறன் கொண்டவரா என்ற ஆலோசனைகளை மேற்கொள்ளும் வகையில், இப்போது பெரிய கம்பெனிகளில் ஆட்களை தேர்வு செய்கின்றனர்.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஓராண்டு சம்பளம், 3 லட்சம் ரூபாய் தந்தால் போதும், அதிக திறமை கொண்டவர்களுக்கு, அதிக சம்பளம் தரலாம் என்ற உத்தியை பின்பற்றுகின்றன. ஒரு பொறியியல் பட்டதாரி, ஆண்டு வருமானம், 20 லட்சம் சம்பளம் பெறுவதற்குள், அவர் அதிக பிரயாசை பெற நேரிடும். அரைகுறையாக இருந்து காலம் தள்ளுவது, தனிப்பட்டவரின் அபார அதிர்ஷ்டத்தை பொறுத்தது.இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு, 'நாஸ்காம்' நிறுவனம், சமீபத்தில், பொறியியல் பட்டதாரிகள் குறித்து நடத்திய ஆய்வில், சில தகவல்கள் கிடைத்தன. அதன்படி, இந்தியாவில் உள்ள வேலை தேடும் பொறியியல் பட்டதாரிகளில், 27 சதவீதம் பேர் மட்டுமே, முழுத்திறன் பெற்றவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.ஆனால், இந்தியாவின் மொத்த வளர்ச்சி அதிகரித்து, 7 சதவீதத்தை எட்டி, அதிலும் உயர்ந்து நின்றால், அடுத்த ஆறு ஆண்டுகள் கழித்து, பல்துறைகளுக்கும், 25 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தேவைப்படலாம் என, பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்ற கல்வி, திறனறி தகுதிகள் மற்ற தேவைகளை வளர்த்துக் கொண்டால் தான், இளைஞர்களுக்கு, பொருளாதார அடிப்படையில் சற்று நிம்மதியான வாழ்க்கை அமையும்.
சில பெரிய நிறுவனங்களும், மத்திய அரசும், திறனறி பயிற்சிகளுக்கு சில ஏற்பாடுகளை
இப்போது துவங்கியிருப்பது நல்ல விஷயம்.வங்கி வேலைகளில், இனி பணிபுரிய விரும்புவோர், அத்துறை அடையும் நவீனமயத்திற்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதுடன், வங்கிச் சேவைகளையும் கையாளப் பழகுவதின் மூலமே, அதில் நீடிக்க முடியும்.கல்வி பயின்று, பட்டம் பெற்றதும், அரசாங்க வேலை, அல்லது வேறு பணிகள் என்ற காலம் இனி இருக்காது. ஏனெனில், உலகப் பொருளாதாரத்திற்கு ஈடாக வளரும்போது, இதை எதிர்கொள்வதைத் தவிர வழி இல்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.