Pages

Monday, September 1, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தற்போது 100 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 107 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்கள் 30 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 50 லட்சம் பேரும் பயன்பெறுவார்கள்.


இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தொழில் துறையில் 2013 ஜூலை 1ஆம் தேதி முதல் 2014 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், சில்லறை பண வீக்க விகிதம் 7.25 சதவீதமாக உள்ளது.

எனவே, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு நிதியமைச்சகம் அனுப்பியுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஏற்கெனவே, 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 100 சதவீதமாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தியது.

அரசு ஊழியர்கள் அதிருப்தி: அகவிலைப்படி மேலும் 7 சதவீதம் உயர்த்தப்பட்டாலும், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்காததால், மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது: இதற்கு முன்பு அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டும்போது, அது அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு வந்தது.

தற்போது, 100 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், இதுகுறித்து, ஏழாவது ஊதியக் குழுவிடமும், மத்திய அரசிடமும் நினைவூட்டினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கே.கே.என்.குட்டி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.