அரசு பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர், ஆசிரியைகள்கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். காரணம் அரசு பள்ளிகளில் ஒழுக்கம் கிடைக்காது. நல்ல கல்வி கிடைக்காது என்பது போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
ஆனால் சமீப காலமாக இவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் அரசு பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி கணினி கல்வி, ஒழுக்கம், சுகாதாரம், விளையாட்டு, ஆன்மிகம், சிறப்பு வகுப்புகள் போன்றவற்றை கற்பித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதன்படி செய்யாறு அரசு ஆண்கள் பள்ளியில் நேர்மை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1500 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் 60 ஆசிரியர், ஆசிரியைகள் இங்கு பணியாற்றுகின்றனர். அடிப்படை வசதிகள், கட்டிட வசதிகள் உள்ளன.இப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களிடையே அடிக்கடி அடிதடி, மோதல், ஆயுதங்களால் தாக்குதல் போன்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வந்தது. இதனால் பெற்றோர் மட்டுமின்றி பொதுமக்களும் வேதனை அடைந்தனர்.இந்த நிலைமையை மாற்ற தலைமை ஆசிரியர் வழிகாட்டுதல்படி பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். அதன்படி மாணவர்களுக்கு ஒழுக்கம், நேர்மை போன்ற நற்பண்புகள் குறித்து அறிவுரை கூறி வந்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் மோதல் போக்கை கைவிட்டனர். படிப்பிலும் ஆர்வம் காட்ட தொடங்கினர்.
அதோடு மாணவர்களுக்கு கல்வியுடன் நேர்மையை போதிக்கும் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பென்சில், பேனா, ஸ்கேல் உள்ளிட்ட கல்வி சம்பந்தமான பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் கொண்ட ஒரு கடையை தொடங்கினர். இதில் உள்ள பொருட்களின் விலை பட்டியல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் பொருளுக்குரிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களுக்குரிய காசை அங்குள்ள பெட்டியில் போட்டுவிட்டு பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அங்காடியை செய்யாறு ஆர்டிஓ எஸ்.சாந்தா நேற்று தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment