அண்ணா பல்கலையில் ஜுன் 27ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்ற உத்தரவால், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு துவங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு, இன்று(ஜுன் 27ம் தேதி) துவங்க இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், இன்று முதல் நடக்க இருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக, அண்ணா பல்கலை அறிவித்தது.
"கலந்தாய்வு துவங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்,&'&' என, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் அறிவித்துள்ளார். விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, ஏற்கனவே முடிந்த நிலையில், அதிக மாணவர்கள் பங்கேற்கும் பொதுப்பிரிவு கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க இருந்த, 3,000 பேருக்கு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பல மாணவர்கள், நேற்றிரவே, சென்னை வந்து சேர்ந்தனர்.
திடீர் தள்ளி வைப்பு
இந்நிலையில், "உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், இன்று முதல் நடக்க இருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு, தள்ளி வைக்கப்படுகிறது" என, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் அறிவித்தார்.
அவரது அறிவிப்பு: ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு), புதிய தொழில்நுட்ப கல்லூரிகள் அனுமதி கோரி விண்ணப்பித்த நிலுவை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, 7 நாள், காலஅவகாசம் வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, அண்ணா பல்கலையில், 27ம் தேதி (இன்று) முதல் நடத்த இருந்த, பி.இ., சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வு, தள்ளி வைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்குப் பிறகே, கலந்தாய்வு துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம். கலந்தாய்வு, ஒரு வாரம் தள்ளிப்போனால், ஒட்டுமொத்த கலந்தாய்வு அட்டவணையும், ஒரு வாரம் தள்ளிப்போகும். ஜூலை, 28ம் தேதியுடன், கலந்தாய்வை முடிக்கும் வகையில், ஏற்கனவே, அண்ணா பல்கலை, அட்டவணையை வெளியிட்டது.
தற்போது, ஆகஸ்ட் முதல் வாரம் வரை, கலந்தாய்வு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பி.இ., படிப்பில் சேர, 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 560 கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.