உடுமலை அருகே கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியை புறக்கணிப்பதை தடுக்க, அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு இலவச ஆங்கில பயிற்சியளித்தல் என்ற புதிய நடைமுறையை பள்ளி நிர்வாகத்தினர் செயல்படுத்த துவங்கியுள்ளனர்.
அரசுப்பள்ளிகளில், பல்வேறு காரணங்களால், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. ஆங்கில வழிக்கல்வி மீதான மோகம் கிராமங்களிலும் பரவியதால், பல்வேறு, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் அரசுப்பள்ளிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், சரியும் மாணவர் சேர்க்கையால், பல்வேறு அரசுப்பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கிராமங்களில் செயல்படும், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பல்வேறு புதிய நடைமுறைகளை ஒவ்வொரு கல்வியாண்டும் அமல்படுத்துகின்றனர்.
உடுமலை, சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 1925ம் ஆண்டு துவக்கப்பட்டது. சின்னவீரம்பட்டி சுற்றுப்பகுதியிலுள்ள கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. தற்போது 170 மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்வித்தரம், மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்க சிறப்பு வகுப்புகள், என்.சி.சி அமைப்பு, பசுமைப்படை உள்ளிட்ட மாணவர் அமைப்புகள், விளையாட்டுத்திறன் மேம்பாட்டிற்கு பள்ளி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக்கல்வியாண்டில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச ஆங்கில வகுப்புகள் எடுத்து, அரசுப்பள்ளிக்கு அவர்களை ஈர்க்கும் புது யுக்தியை செயல்படுத்தியுள்ளது. பள்ளியின் சார்பில் ஆங்கில வகுப்புகளுக்காக இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்குழந்தைகளுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.
பள்ளித்தலைமையாசிரியர் இன்பக்கனி கூறியதாவது: குழந்தைகள் துவக்கத்திலேயே ஆங்கிலம் கற்க வேண்டும் என பெற்றோர் விரும்புவதால், அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வருவதில்லை. இதனை மாற்றவே, அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச ஆங்கில வகுப்பு நடத்துகிறோம். இவ்வகுப்பிற்கு ஆசிரியர்கள் நியமிக்கவும், சிற்றுண்டி வழங்கவும் முன்னாள் மாணவர் சங்கம் உதவுகிறது. இதனால், பெற்றோர் குழந்தைகளை விரும்பி அங்கன்வாடியில் சேர்க்கின்றனர். அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆங்கில புத்தகங்களும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் பெற்றோர்களின் நிதி உதவியின் மூலம் வழங்கப்படுகிறது.குழந்தைகளுக்கு அங்கன்வாடியிலிருந்தே ஆங்கில அறிவை வளர்ப்பதுடன், அரசுப்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு ஏற்படவும் இத்தகைய இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.