Pages

Monday, June 30, 2014

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு; 8 மணி நேரம் காத்திருப்பு

சிவகங்கையில், "ஆன்லைனில்' நேற்று மாலை வரை காலியிட விபரங்களை வெளியிடாததால், ஆசிரியர்கள் எட்டு மணி நேரம் வரை, கவுன்சிலிங் மையத்தில் காத்திருந்தனர். சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று, பட்டதாரி, சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என, அறிவித்தனர்.
அதன்படி, மாறுதல் கோரி விண்ணப்பித்த, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்திற்கு காலை 9 மணிக்கெல்லாம் வருகை தந்தனர். தொடர்ந்து, மாலை 5 மணி வரை, அடிப்படை வசதிகளே இல்லாத, மையத்தில் எட்டு மணி நேரமாக காத்திருந்தனர். மின்தடை ஏற்பட்டால், ஜெனரேட்டரை பயன்படுத்தி, கலந்தாய்வு நடத்த கல்வித்துறை ஆலோசனை வழங்கியது. ஆனால், சிவகங்கையில், மின்வெட்டு ஏற்பட்டபோதும், ஜெனரேட்டர் வசதி பகல் 12 மணி வரை செய்யப்படவில்லை. இதனால், கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் வகுப்பு அறையில், கோடை வெயில் புழுக்கத்தில் அமர்ந்திருந்தனர். புகார்: நேற்று மாலை 5 மணி வரை, காத்திருந்த ஆசிரியர்கள், அதிருப்தியில், சி.இ.ஓ.,விடம் முறையிட்டனர். அப்போது, "ஆன்லைனில்', காலி இடங்கள் விபரங்கள், இன்னும் வெளியிடப்படவில்லை என, கூறினர். இதனால், நேற்று மாலை வரை காத்திருந்த ஆசிரியர்கள், அதிருப்தியுடன் காணப்பட்டனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில், இருந்து இன்னும் ஆன்லைனில், காலியிட விபரம் வழங்கவில்லை. தமிழகம் முழுவதும் , இப்பிரச்னை உள்ளது. கலந்தாய்வு நடத்தி, "டிரான்ஸ்பர்' உத்தரவு வழங்க, நாங்கள் தயாராக தான் உள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.