மாநில அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
அங்கீகாரம்
சென்னை ஐகோர்ட்டில், திருமுல்லைவாயிலை சேர்ந்த ஏ.வி.பாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினை 2009-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை 2011-ம் ஆண்டு தமிழக அரசு மாநிலத்தில் அமல்படுத்தியது. இந்த சட்டத்தின்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அங்கீகாரம் பெறவேண்டும். இதற்காக அந்த பள்ளிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரம் ஆகியவற்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமே மாநில அரசு அங்கீகாரம் வழங்க முடியும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆனால், தமிழகத்தில் பல சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாநில அரசின் அங்கீகாரம் பெறாமலேயே இயங்கி வருகிறது. இவ்வாறு செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு இருப்பதால், அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அருணா ஜெகதீசன், எஸ்.வைத்யநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.