Pages

Monday, May 19, 2014

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து மாற்று திறனாளிகளுக்கான நலத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.


தர்மபுரியில், காது கேளாதோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் சந்திரசேகரன் என்பவர் முதுநிலை ஆசிரியராக தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். முறைப்படி பதவி உயர்வு வழங்க சந்திரசேகரன் கோரினார். "தேவையான தகுதியை பெறாததால், முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க முடியாது" என மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கமிஷனர் உத்தரவிட்டார். கடந்த 2012 பிப்ரவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், இடைநிலை ஆசிரியராக பதவி இறக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது.

கமிஷனரின் உத்தரவை ரத்து செய்யவும், பதவி உயர்வு அளிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் மனுத் தாக்கல் செய்தார். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் "பிளஸ் 2 முடிக்காமல் தொலைதூர கல்வி மூலம் பட்டம் பெற்றுள்ளார். எனவே, அந்த பட்டம் செல்லாது; முதுகலை பட்டமும் செல்லாது" என, கூறப்பட்டது. மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.சந்திரசேகர் ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் எஸ்.எஸ்.எல்.சி. படித்துள்ளார். 1978 வரை எஸ்.எஸ்.எல்.சி. தான் இருந்தது. அதன்பின் தான் பிளஸ் 2 முறை அறிமுகமானது. கர்நாடகாவில் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார். தமிழக அரசு 2012 டிசம்பரில் பிறப்பித்த உத்தரவில் "எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றது போல் பட்டப் படிப்பில் சேர தகுதி உள்ளது" என, கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முடித்து, ஆசிரியர் கல்வியில் பட்டயப் படிப்பு முடித்தவர்களை பிளஸ் 2 தேர்ச்சி பெற்றது போல் கருத வேண்டும் என, நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும். அதற்குரிய பணப் பலன்கள், சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.