"பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததால், 100 மதிப்பெண் எளிதில் பெற முடியும்," என, மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கணிதம் தேர்வில், "கிரியேட்டிவ்' வினாக்களால் 100க்கு100 போச்சே...' என கவலையடைந்த மாணவர்களுக்கு, அறிவியல் தேர்வு, மகிழ்ச்சியை தந்துள்ளது. இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர் கூறியதாவது:
ஏ.சதீஷ்குமார், மாணவர், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, மதுரை
எதிர்பார்த்தை விட வினாக்கள் மிக எளிமையாக இருந்தன. பாடங்களின் பின் பகுதியில் உள்ள வினாக்கள் அதிகம் இடம் பெற்றன. குறிப்பாக, ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள், பெரும்பாலும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டவை. ஐந்து மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களும், விடை தெரிந்தவையாக இருந்தன. 'சென்டம்' எளிதில் பெறலாம்.
மு.முத்துலட்சுமி, மாணவி, அரசு உயர்நிலை பள்ளி, பாரைப்பத்தி, மதுரை
இயற்பியல், வேதியியல், உயிரியல் என அனைத்து பகுதி வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேர்வு எழுதி முடித்து விட்டேன். பின், எழுதியவற்றை பொறுமையாக திருப்பி பார்க்க நேரம் இருந்தது. இரண்டு மதிப்பெண் பகுதியில், 30 வினாக்களில் 20ஐ எழுத வேண்டும். ஆனால், 30 வினாக்களும் அடிக்கடி கேட்கப்பட்டவையாக இருந்தன.
செ.மஞ்சுளா, ஆசிரியை, அரசு உயர்நிலை பள்ளி, திருப்பாலை, மதுரை
மூன்றாவது திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள், பெரும்பாலும் வந்திருந்தன. மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று, இரண்டு, மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள், கடந்த பொதுத் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்டவை. வேதியியல், இயற்பியலில் கணக்கு பயன்படுத்தி எழுதும் வினாக்கள், மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்றவையாக இருந்தன.
நோய்த் தடுப்புகள், புகை மண்டலம், நவீன அணுக் கொள்கை, விண்வெளி நிலையத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பகுதிகளில், அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களே வந்துள்ளன. சராசரி மாணவர்கள், 70 மதிப்பெண் வரையும், ஓரளவு நன்றாக படிப்பவர்கள்கூட எளிதில் 'சென்டம்' எடுக்கவும் வாய்ப்புள்ளது.
2 comments:
sir please convey the dge to give one mark to the question no 14
Pls give one mark for question no 14...
Post a Comment