பள்ளி சமையல் அறை கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் வகுப்பறையில் வைத்து உணவு சமைக்கப்பட்டு வருகிறது. எனவே, உடைந்து பயன்பாடற்ற நிலையில் கிடக்கும் சமையல் அறையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூரை அடுத்த தளி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் கொத்தஜீகூரு என்ற கிராமம் உள்ளது. இங்கு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு சொந்தமான சமையல் அறை கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், மேற்கூரைகள் பெயர்ந்து மிகவும் சிதிலமடைந்து உள்ளதால் சமையல் அறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பள்ளி வகுப்பறையின் ஒரு பகுதியில் மாணவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தளி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே, பள்ளி வகுப்பறை கட்டடம் மிகவும் சிறிய இடத்தில் இயங்கி வருகிறது. இதில், ஒரு பகுதி சமையல் அறையாக மாற்றப்பட்டு உள்ளதால் மாணவர்கள் அமர்ந்து படிக்க போதிய இட வசதி இல்லை.
மேலும், சமையல் அறையில் இருந்து வெளியேறும் புகை காரணமாக, மாணவர்களுக்கு கண் எரிச்சலை ஏற்பட்டு வருகிறது. எனவே, தளி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து புதிய சமையல் அறை கட்டிக்கொடுக்க வேண்டும் என, இப்பகுதி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment