Pages

Tuesday, April 22, 2014

2 மணி நேரத்துக்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ்.,; ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை அனுப்ப உத்தரவு

ஓட்டுப்பதிவு நிகழ்வு தொடர்பாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேர்தல் கமிஷனுக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ்., அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும், ஓட்டுச்சாவடி அலுவலர்களே முழு பொறுப்பு. இவர்கள் பணியாற்ற வேண்டிய ஓட்டுச்சாவடி விவரம், அதற்கான நியமன உத்தரவு, நாளை (23ம் தேதி) காலை, வழங்கப்படும்.
ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் நிலை அலுவலர்கள் அனைவரும், நாளை மதியத்துக்குள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் ஆஜராக வேண்டும். ஆஜரானதில் இருந்து, அனைத்து நடவடிக்கைகளையும், எஸ்.எம்.எஸ்., மூலமாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் வந்த விவரம், கட்சி ஏஜன்டுகள் விவரம், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது, ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், ஒவ்வொரு நிகழ்வுகளையும், தேர்தல் கமிஷனுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க வேண்டும். சென்னையில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், அவ்விவரங்கள் பதிவாகும். ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஓட்டுப்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும். குளறுபடி ஏற்பட்டு, ஓட்டுப்பதிவு தடைபட்டாலும், அதன்பின், சரி செய்து ஓட்டுப்பதிவு துவங்கியதையும் தெரிவிக்க வேண்டும். இறுதியாக, ஓட்டளித்த ஆண் வாக்காளர்கள்; ஓட்டளித்த பெண் வாக்காளர்கள்; மொத்தம் பதிவான ஓட்டுக்கள், ஓட்டுப்பதிவு நிறைவு ஆகிய விவரங்களையும், எஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்ப வேண்டும். தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். இம்முறை, தேர்தல் கமிஷன் தரப்பில் மொபைல் எண்கள் வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனுப்பும் குறுந்தகவல், நேரடியாக கம்ப்யூட்டரில் பதிவாகும். கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையிலும், ஓட்டுப்பதிவு விவரங்கள் சேகரிக்கப்படும்,' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.