தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஜம்மனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், 78 மாணவ, மாணவிகளை களப்பணிக்காக பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதிக்கு சென்றனர். பள்ளி ஆசிரியர்கள் மணி, சந்திரசேகர், பள்ளி உதவியாளர் மனோகரன் ஆகியோர் இவர்களை அழைத்து சென்றனர்.
வாணியாறு அணையை சுற்றி பார்த்து விட்டு, 11 மணியளவில் சாப்பிட்டுள்ளனர். அப்போது, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஜம்மனஹள்ளியை சேர்ந்த டிரைவர் மூர்த்தி என்பவரது மகள் சவுந்தர்யா (16), மணிமேகலை (14), எட்டாம் வகுப்பு படிக்கும் பவித்ரா (13) ஆகியோர் சாப்பிட்டு விட்டு, கையை கழுவுவதற்காக, அணையில் குட்டை போல் தேங்கி நின்ற தண்ணீர் உள்ள பகுதிக்கு சென்று திரும்பும் போது, கால் சேற்றில் சிக்கியது.
சேற்று பகுதி அதிகமாக இருந்ததால், மூன்று மாணவிகளும் சேற்றில் சிக்கி உள்ளனர். இதனால், மாணவிகள் தங்களை காப்பாற்றக்கோரி, சத்தம் போட்டுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மணி உள்ளிட்டோர், மணிமேகலை, பவித்ரா என்ற மாணவிகளை, சேற்றில் இருந்து காப்பாற்றினர்.
சவுந்தர்யாவை காப்பாற்ற முயற்சி செய்த போது, அவர் சேற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து, மாணவிகளின் அழுகுரல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சவுந்தர்யாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து, மோளையானூர் வி.ஏ.ஓ., கற்பகம், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். மேலும், களப்பணிக்கு சென்ற ஆசிரியர்கள், மாணவிகளிடம், மாவட்ட கல்வி அலுவலர் பன்னீர்செல்வம், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பள்ளி மாணவி அணையில் சேற்றில் மூழ்கி இறந்தது, தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர் ஜெகநாதன், மற்றும் ஆசிரியர்கள் சந்திரசேகர், மணி, பள்ளி உதவியாளர் மனோகரன் ஆகிய நான்கு பேரையும், சி.இ.ஓ., மகேஸ்வரி “சஸ்பெண்ட்” செய்து உத்தரவிட்டார்.
இறந்த மாணவியின் உடல், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சனிக்கிழமை மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை சொந்த ஊரக்கு எடுத்து சென்ற குடும்பத்தினர், உடலை அடக்கம் செய்யாமல் போராட்டம் நடத்த திரண்டு உள்ளதாக, எஸ்.பி., ஆஸ்ராகர்க்குக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, எஸ்.பி.,யின் உத்தரவின் பேரில், அரூர் டி.எஸ்.பி., சம்பத் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிந்து, மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை காலை மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.